×

விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு யூடியூபர் சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசிடம் பெண் காவலர்கள் பரபரப்பு புகார்

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் கூட்டாக தமிழக அரசிடம் அளித்த புகார் மனு: தமிழ்நாடு முதலமைச்சராக கலைஞர் இருந்த போது தான் காவல் துறையில் பெண் காவலர் பணியில் அமர்த்தப்பட்டு, பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தார். சமீபத்தில் யூடியூபர் சங்கர் வெளியிட்ட தரக்குறைவான கருத்துகளால், காவல் துறையில் உள்ள பெண்களாகிய நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் உள்ள பெண்களைப் பற்றிய அவரது பொதுவான கருத்துகள் எங்கள் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்தியது. நாம் தினமும் செய்யும் தியாகங்களை மறந்து நமது பாலினத்தை வைத்து மட்டும் யாரோ ஒருவர் ஆதாரமற்ற முறையில் அவமதிக்க முடியும் என்பது வருத்தமளிக்கிறது. இத்தகைய கருத்துகளின் பரந்த சமூக தாக்கங்கள் குறித்து நாங்கள் அஞ்சுகிறோம். கடமையை செய்யும் போது எண்ணற்ற சவால்களையும் ஆபத்துக்களையும் சந்திக்கிறோம்.

யூடியூபர் சங்கரின் நியாயமற்ற வார்த்தைகளால் நம்மை இழிவாக பார்க்கக்கூடிய நேர்மையற்ற நபர்களை அடிக்கடி எதிர்கொள்கிறோம். இதுபோன்ற அவமரியாதைக் கருத்துக்களைக் கேட்கும்போது எங்கள் குடும்பங்கள் எப்படி உணருவார்கள்?. சமூகக் கருத்துகள் உடனடியாக பரவக் கூடியவை. இந்த இழிவான கருத்துகள் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

காவல் துறையில் பணிபுரியும் திருமணமாகாத பெண்களுக்கு, இதுபோன்ற அவதூறுகளால் திருமணத்திற்கான வாய்ப்புகள் பாதிக்கும். இது நியாயமற்றது. செல்வாக்கு மிக்க பதவியில் இருப்பவர்களிடம் நீதி வழங்கப்படுவதையும், நமது கண்ணியம் நிலை நாட்டப்படுவதையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். எனவே யுடியூபர் சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.

The post விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு யூடியூபர் சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசிடம் பெண் காவலர்கள் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,Shankar ,Tamilnadu ,CHENNAI ,Tamil Nadu Police ,Tamil Nadu government ,chief minister ,Tamil Nadu ,YouTuber… ,Dinakaran ,
× RELATED போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ்...